உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிரைம் செய்திகள்..

கிரைம் செய்திகள்..

ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு

நெல்லிக்குப்பம் ரஹ்மான் நகரை சேர்ந்தவர் சரத்பாபு. இவர், 2 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றார். அவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த உறவினர் குமார் பாதுகாத்து வந்தார். குமார் நேற்று மாலை வீட்டில் விளக்குகளை போட்டுவிட்டு பூட்டிக் கொண்டு தனது வீட்டுக்கு சென்றார். நேற்று காலை, விளக்குகளை நிறுத்த குமார் சென்றபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 5 சவரன் நகை, வெள்ளி பாத்திரங்கள், ரொக்கம் உட்பட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருந்தது. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

தொழிலாளி தற்கொலை

திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சக்திவேல்,33. கூலி தொழிலாளி. இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் வயிற்றுவலி அதிகமானதால் விரக்தியடைந்த சக்திவேல், பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்து இறந்தார். திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாலிபர் தற்கொலை

ஜெயங்கொண்டம் அடுத்த நரசிங்கபாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் மகன் வல்லரசு,24. இவர் தனது மனைவி வீரலட்சுமி,21, ஒன்பது மாத குழந்தையுடன் ஆவினங்குடி அடுத்த கொடிக்களத்தில் தங்கி, கடந்த 6 மாதமாக செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி தம்பதிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறில், மனமுடைந்த வல்லரசு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மனைவி மாயம்: கணவர் புகார்

கடலுார் அடுத்த கோண்டூர் பாரத் நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி சாந்தி,52; தம்பதிக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சாந்தி திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரகளை வாலிபர் கைது

கிள்ளை அடுத்த பின்னத்துார் பள்ளி வாசல் முன், அதே பகுதியை சேர்ந்த முகமது சாலி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளை செய்தார். அதனை கண்டித்த ரியாஸ்தீன்,30; என்பவரை தாக்கினார்.இதுகுறித்த புகாரின் பேரில் கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிந்து, முகமது சாலியை கைது செய்தனர்.

கடன் தொல்லை: வாலிபர் தற்கொலை

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,40; கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தார் அவரை காப்பாற்றி, கடலுார் அரசு மருத்தவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை