பண்ருட்டி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட 70 வீடுகள் அகற்றம்: இடைக்கால தடை உத்தரவால் பணி நிறுத்தம்
பண்ருட்டி; பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் கிராமத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்திரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றிய நிலையில் ஐகோர்ட் தடை விதித்துள்ளதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிநிறுத்தப்பட்டது. பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க தனியார் இடம் 6.84 சென்ட் நிலம் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து ஆதிதிராவிட நலத்துறையினர் கையகப்படுத்தினர்.மனையில்லாத ஆதிதிராவிடர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2024 ஜூன் மாதம் வழங்கிய தீர்ப்பில் 12 வாரத்திற்குள் தகுதி உள்ள நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும் இதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என உத்திரவிட்டது. இதனையடுத்து நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும் என அறிவித்திருந்தனர். தகவலறிந்த அப்பகுதி பெண்கள் 80 பேர் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு அங்குசெட்டிப்பாளையம் கடலுார்- உளுந்துார்பேட்டை மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.கடலுார் ஆர்.டி.ஒ., அபிநயா தலைமையில் ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,க்கள் ராஜா, ராமதாஸ், தாசில்தார் ஆனந்த், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர். ஆக்கிரமிப்பு அகற்றும் இடத்தில் தகுதியுள்ள 67 நபர்களுக்கு உடனடி பட்டா வழங்கப்படுவதாகவும், பட்டியலில் பெயர் உள்ளவர்கள் காலி செய்து உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி கொள்ள அறிவுறுத்தினார். அதன்படி பட்டியலில் பெயர் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி கொண்டனர்.மீதமுள்ளவர்கள் முறைப்படி மனு வழங்கினால் அவர்களுக்கும் மீதமுள்ள மனைகள் வழங்கப்படும் என்றார். இதனையடுத்து மதியம் 1:00 மணிக்கு பிறகு சுமூகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிெதாடர்ந்தது. இடைக்கால தடை
ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தடை விதிக்கவேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். மனு மீது நேற்று மாலை நடந்த விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட இடைக்கால தடை விதித்தனர். இதன் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.