மாற்றுத்திறனாளி சிறுவர்கள் கல்வி சுற்றுலா பயணம்
கடலுார் : மாற்றுத்திறனாளி சிறுவர்கள் கல்வி சுற்றுலா பயணத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆண்டு தோறும் ஒரு நாள் இலவச கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.அதன்படி, கடலுாரில் தொண்டு நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் ஆரம்ப கால பயிற்சி மையத்தில் படித்து வரும் பார்வையற்ற, காது கேளாத மற்றும் மனவளர்ச்சி அடையாத சிறுவர்கள் 30 பேர், அவர்களது பெற்றோர், பயிற்சி ஆசிரியர்களுடன் நேற்று பிச்சாவரம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு சுற்றுலா சென்றனர். இவர்களின் பயணத்தை கடலுார் டவுன்ஹால் அருகில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். அப்போது, மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், பிச்சாவரம் படகு இல்ல மேலாளர் பைசல் அகமது, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.மாணவர்களுடன் 10 சிறப்பாசிரியர்கள், 5 உதவியாளர்கள் மற்றும் பெற்றோர் உடன் சென்றனர்.