உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் மின் கேபிள் போட வரைபடம் தயாரிப்பு ... தீவிரம்; பஸ் நிலைய பகுதியில் விரைவில் முதற்கட்ட பணி

கடலுாரில் மின் கேபிள் போட வரைபடம் தயாரிப்பு ... தீவிரம்; பஸ் நிலைய பகுதியில் விரைவில் முதற்கட்ட பணி

கடலுார்: கடலுார் மாநகரில் பிரதான பஸ் நிலையம், லாரன்ஸ் ரோடு பகுதியில் முதற்கட்ட மின்கேபிள் புதைக்கும் பணிக்காக புதிய வரைபடம் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடலுார் மாவட்டம், கடந்த 2011ம் ஆண்டு வீசிய தானே புயலால் பெரும் பாதிப்பிற்குள்ளானது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், டிரான்ஸ் பார்மர்கள், துணை மின் நிலையத்திற்கு வரும் உயர்மின் கோபுரங்கள் சாய்ந்தன. மாவட்டத்தின் தலைநகரான கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் 4 நாட்களாக மின்சாரம் இல்லை. தலைமை செயலகத்திற்கு கூட தகவல் தெரிவிக்க மின்சாரம் இல்லாமல் அரசு அதிகாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கடலுார் மாவட்டமே தகவல் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. ஜெனரேட்டர் உதவியுடன் முக்கிய தகவல்கள் அனுப்பப்பட்டன. தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் நாளொன்றுக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை மின்சாரம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இடைவிடாமல் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை பணி யாற்றிய பின்பு படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டது. இந்த மின்தடையால் ஏற்பட்ட பாதிப்பு அரசுக்கு ஒரு பாடமாக இருந்தது. எதிர் காலத்தில் புயல், மழை, சுனாமி போன்ற பேரிடர் நிகழ்வின் போது மின்சாரம் முற்றிலும் தடைபட்டுவிடக்கூடாது என கருதி புதை வடமின்கேபிள் அமைக்க வேண்டும் என அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. பேரிடரில் அடிக்கடி பாதிக்கப்படுகிற மாவட்டமான கடலுாரில் மின் கேபிள்கள் போட முடிவு செய்யப்பட்டது. உலக வங்கி உதவியுடன் இத்திட்டத்தை நிறைவேற்ற கடலுார், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கடலுார் மாநகரம் மட்டும் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில் 2018ம் ஆண்டு கடலுார் மாநகரில் 2 கட்டமாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன. இதில் கடலோர கிராமங்களுக்கு தனிக்கவனம் செலுத்தி கேபிள் போடப்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்ட 2, 3 பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஓராண்டு காலம் மின் கேபிள் வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முதல் கட்டத்தில் உள்ள பஸ் நிலையம் சுற்றியுள்ள பகுதியில் இது வரை மின்சார கேபிள் போடப்படவில்லை. அதாவது அண்ணா மேம்பாலத்திற்கு மேற்கில் உள்ள பஸ் நிலையம் அதை சுற்றியுள்ள பகுதிகள், திருவந்திபுரம் சாலையில் நகராட்சி எல்லை வரை, வடக்கு பகுதியில் கம்மியம்பேட்டை பாலம் வரையும், தெற்கே மோகினிப்பாலம் வரையிலும் முதற்கட்ட பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி முழுவதும் மின் கேபிள் அமைக்க வேண்டும். ஆனால் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் பிசியாக இருக்கும் பஸ் நிலையம், ரயில்வே சுரங்கப்பாதை, மேம்பாலம் ஆகிய பகுதிகளில் மின் கேபிள் அமைக்க வேண்டும். இத்திட்டத்திற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. கடந்த சில மாதங்கள் முன்பு சட்டமன்றத்தில் கடலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சேர்த்து 490 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதில் கிட்டதட்ட 245 கோடி கடலுார் மாவட்டத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கனவே மின்கேபிள் போடுவதற்கான வரைபடம் போட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. நகரத்தில் பல மாற்றங்கள் நடந்திருக்கும். எனவே புதிய கேபிள் புதைப்பதற்கான புதிய வரைபடம் தயாரித்து அனுப்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரைபடம் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரைபடம் தயாரிக்கும் பணி முடிந்து அதை அரசுக்கு அனுப்பிய பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் டெண்டர் விட்டு பணிகள் துவங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !