கடலுாரில் 14ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
கடலுார்: கடலுார் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 14ம் தேதி நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் 14ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளது. முகாமில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப் படிப்பு படித்த இளைஞர்கள் பங்கேற்கலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலை வாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கப்படாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.