சிலுவைபுரத்தை ஊராட்சியாக அறிவிக்க கோரி உண்ணாவிரதம்
புவனகிரி : கீரப்பாளையம் ஒன்றியம், சிலுவைபுரம் கிராமத்தை ஊராட்சியாக அறிவிக்க கோரி, அப்பகுதியினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.கீரப்பாளையம் ஒன்றியம், சிலுவைபுரம், வயலுார், லால்புரம், சி.மேலவன்னியூர் ஆகிய ஊராட்சிகளில் இடம்பெறுகிறது. இதனால் இரண்டு சட்டசபை தொகுதி மற்றும் இரண்டு ஒன்றிய எல்லையில் வருவதால், இந்தகிராமத்தில் அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.எனவே, மூன்று ஊராட்சிகளில் உள்ள கிராமங்களை பிரித்து, சிலுவைபுரத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து மூன்று ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபைகூட்டத்தில் சிலுவைபுரத்தை ஊராட்சியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றினர். அதன் பேரில் தொகுதி எம்.எல்.ஏ.,அருண்மொழி தேவன் சட்டசபையில் பேசியுள்ளார். இருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், சிலுவைபுரத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி நேற்று சிலுவைபுரம் பஸ் நிறுத்தம் அருகில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.