உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருமகள் விஷம் குடித்து தற்கொலை மாமனார், மாமியார் கைது காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

மருமகள் விஷம் குடித்து தற்கொலை மாமனார், மாமியார் கைது காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

காட்டுமன்னார்கோவில் : மருமகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மாமனார் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூரைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் 65; ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர். இவரது மனைவி பானுமதி 60. இவர்களது மகன் கயல்வேந்தன் 35; அந்தமானில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.மகன் கயல்வேந்தனுக்கும் புவனகிரி அடுத்த வீரமுடையான்நத்தம் அருள்பிரகாசம் மகள் கயல்விழி 29;க்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகன் அந்தமானில் வேலை செய்வதால், மருமகள் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார்.வீட்டில் மருமகள் கயல்விழியிடம் கூடுதலாக வரதட்சனை கேட்டு தாய் வீட்டிற்கு விரட்டி அடிப்பது என, மாமனார் மாமியார் கொடுமை படுத்தியுள்ளனர். கணவரிடம் கூறியும் அவர் கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் மனமுடைந்த கயல்விழி நேற்று முன்தினம் இரவு வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சு மருந்தை குடித்தார். மயங்கி விழுந்த அவரை உடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நேற்று அதிகாலை காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், கயல்விழி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவலறிந்த கயல்விழியின் பெற்றோர், உறவினர்கள், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு, இறப்பிற்கு காரணமான மாமியார் மாமனாரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., விஜயக்குமார், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர்.இதுகுறித்து கயல்விழியின் தாய் மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் மாமனார் செங்குட்டுவன், மாமியார் பானுமதி, கணவர் கயல்வேந்தன், கணவரின் சகோதரி ஆகிய 4 மீது வழக்குப் பதிவு செய்து, மாமனார் செங்குட்டுவன், மாமியார் பானுமதியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !