வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியில், உள்நாட்டு மீனவர்கள் பயன்பெறும் வகையில், மீன் குஞ்சுகள் விடப்பட்டது. கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அடுத்த வீராணம் ஏரி மூலமாக 48 ஆயிரம் ஏக்கர் , விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், ஏரியில் தண்ணீர் தேக்கப்பட்டு, சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. ஏரியில் தண்ணீர் தேக்கப்படுவதால், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும், உள்நாட்டு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில், மீன்வளத்துறை சார்பில் ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கந்தகுமாரன் கிராமம் அருகே நடந்த நிகழ்ச்சியில், சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டார். இந்த ஆண்டு 36 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது முதல் கட்டமாக 4 லட்சம் ரோகு வகை மீன்குஞ்சுகள் விடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
மீனவர்கள் குற்றச்சாட்டு
ஒவ்வொரு ஆண்டும், இலக்கு நிர்ணயித்து, முதல் கட்டமாக மீன் குஞ்சுகள் விடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், அதன் பிறகு மீன்வளத்துறை அதிகாரிகள் நிர்ணயித்த இலக்கிலான, மீனகுஞ்சுகளை ஏரியில் விடுவதில்லை என மீனவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, இத்தொழிலை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்கள், கோடை காலத்தில் ஏரியில் மீன் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.