உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உண்ணி காய்ச்சல் பாதித்த கிராமத்தில் சுகாதாரத்துறையினர் சிறப்பு முகாம்

உண்ணி காய்ச்சல் பாதித்த கிராமத்தில் சுகாதாரத்துறையினர் சிறப்பு முகாம்

விருத்தாசலம் : 'தினமலர்' செய்தி எதிரொலியால், விஜமாநகரம் கிராமத்தில் சுகாதாரத்துறையினர் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர்.விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் ஊராட்சி, புதுவெண்ணெய்குழி ராஜேந்திரன் மகன் சிவகுரு, 32. விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.தகவலறிந்த மங்கலம்பேட்டை வட்டார சுகாதாரத்துறையினர் சென்று, அவரது வீட்டை சுற்றியும் பிளீச்சிங் பவுடர் தெளித்தனர். மேலும், எலி வலைகளை அடைத்து, பிளீச்சிங் பவுடர் தெளித்தனர். இருப்பினும் உண்ணி காய்ச்சல் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இதனைச் சுட்டிக்காட்டி, கிராம மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் தலைமையில், மருத்துவ அலுவலர் பிரதாப் உள்ளிட்ட குழுவினர் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர்.அப்போது, உண்ணி காய்ச்சல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுகாதார குழுவினர் வீடு வீடாக சென்று, டெங்கு கொசுப்புழு உற்பத்தி உள்ளதா என சோதனை செய்தனர். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் இருவர் பாதிப்பு

இதேபோல், கம்மாபுரம் வட்டாரத்தில் பெரியாக்குறிச்சி, விருத்தாசலம் வட்டாரம் கச்சிபெருமாநத்தம் கிராமங்களில் தலா ஒருவர் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த சுகாதாரத்துறையினர் அவர்களின் வீடுகளை சுற்றி பிளீச்சிங் பவுடர் தெளித்து, தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். எனவே, மேற்கூறிய கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ