உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வாகன நெரிசலை மறந்து வசூலில் போலீசார் மும்முரம்: விருதையில் வாகன ஓட்டிகள் புலம்பல்

 வாகன நெரிசலை மறந்து வசூலில் போலீசார் மும்முரம்: விருதையில் வாகன ஓட்டிகள் புலம்பல்

செ ன்னை - ஜெயங்கொண்டம், கடலுார் - திருச்சி, சிதம்பரம் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக என்.எல்.சி., இந்தியா லிட்., சர்க்கரை, சிமென்ட் ஆலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பஸ், லாரி, வேன் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும், மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப, ஒவ்வொரு வீட்டிலும் கார், 2 பைக்குகள் என வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. இந்த வாகனங்களுக்கு வழிமுறைகளை வழங்குதல், வாகன ஓட்டத்தை கண்காணித்தல் மற்றும் அவற்றால் வரும் விபத்துகளை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை போக்குவரத்து போலீசார் செய்ய வேண்டும். ஆனால், விருத்தாசலம் நகரில் உள்ள போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார், நகரின் நான்கு எல்லைகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மதுஅருந்திவிட்டு வருகின்றனரா என பரிசோதித்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் மட்டுமே முனைப்பு காட்டுகின்றனர். இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தாலும், நகரில் வாகன நெரிசலை தவிர்க்க முடிவது இல்லை. சில போலீசார், அபராதம் விதிக்காமல் இருக்க வேண்டுமானால் குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு செல்லுமாறு கூறுவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். இதனால், நகர சாலைகளை கடக்கும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள், பணி முடிந்து செல்லும் அரசு அலுவலர்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். பிரதான ஜங்ஷன் சாலை, கடலுார், வேப்பூர், பெண்ணாடம் சாலைகளில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் அவலம் தொடர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால், அபராதம் விதிப்பதுடன் வாகன நெரிசலை சீரமைக்கும் பணியிலும் போக்குவரத்து போலீசார் அக்கறையுடன் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !