தேசிய அணிக்கான போட்டிக்கு கடலுார் மாணவி தகுதி
கடலுார்: சர்வதேச பள்ளிகளுக்கான விளையாட்டுப்போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கான தெரிவுப்போட்டி முகாமிற்கு, கடலுார் மாணவி தகுதி பெற்றுள்ளார். சர்வதேச பள்ளிகளுக்கான விளையாட்டுக்கூட்டமைப்பு சார்பில், 15 வயதிற்கு உட்பட்டோருக்கான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான வாலிபால் போட்டி டிச.4ம் தேதி முதல் டிச.13ம் தேதி வரை சீனாவில் உள்ள ஷாங்கிலோவில் நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் பொருட்டு, மாநில அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யும் முகாம் நடந்தது. தமிழகத்தில் கடந்த 7ம் தேதி தர்மபுரியில் மாணவிகளுக்கான தெரிவுப்போட்டிகளும், 8ம் தேதி புதுக்கோட்டையில் மாணவர்களுக்கான தெரிவுப்போட்டிகளும் நடந்தது. மாணவிகளுக்கான தெரிவுப்போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கடலுார், செயின்ட் ஆன்ஸ் பள்ளி மாணவி கிருத்திக்ஷா,15, தேர்வு செய்யப்பட்டார். இவர், ஆக.28லிருந்து 30ம் தேதி வரை புனேவில் நடக்கும் தேசிய அணிக்கான தேர்வு முகாமில் பங்கேற்க உள்ளார். அதில் தேர்வு செய்யப்படும் மாணவிகள், சர்வதேச அணியில் இந்தியாவுக்காக விளையாட உள்ளனர். மாணவி கிருத்திக்ஷாவை, மெட்ரோ பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் மற்றும் செயின்ட் ஆன்ஸ் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.