ரூ.2,245 கோடி நிகர லாபம்: என்.எல்.சி., புதிய சாதனை சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்
நெய்வேலி, : என்.எல்.சி., நிறுவனம் ரூ. 2,245 கோடி நிகர லாபமாக ஈட்டி, புதிய சாதனை படைத்துள்ளது.என்.எல்.சி., யில், கடந்த ஆண்டு டிச., 31 ம் தேதியுடன் முடிவடைந்த 2023--2024 நிதியாண்டின், 3வது காலாண்டு மற்றும் முதல் ஒன்பது மாதங்களுக்கான செயல்பாடுகள் குறித்த இயக்குநர் குழுக்கூட்டம், சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமையில் நடந்தது.இதுகுறித்து என்.எல்.சி., சேர்மன் கூறியதாவது:என்.எல்.சி., நிறுவனம், 2024-25ம் நிதியாண்டில், இடைக்கால ஈவுத்தொகையாக, ஒரு பங்கிற்கு 1 ரூபாய் 50 பைசா செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு டிச., 31ம் தேதியுடன் நிறைவடைந்த 2023- 24 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், பழுப்பு நிலக்கரி உற்பத்தி, 171.35 லட்சம் டன் எட்டியுள்ளது. குறிப்பாக, முதல் ஒன்பது மாதங்களில் நிலக்கரி உற்பத்தி 115.16 லட்சம் டன்கள் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.மின் உற்பத்தியை பொறுத்தவரை, மொத்த மின் உற்பத்தி 20,568 மில்லியன் யூனிட்களை எட்டியுள்ளது, இதில், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியான 1,579 மில்லியன் யூனிட் அடங்கும். நிதி நிலை செயல்பாடுகளை பொறுத்தவரை, என்.எல்.சி., வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 11,445 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ஈட்டப்பட்ட ரூ.9,458 கோடியை விட அதிகமாக 21 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.என்.எல்.சி.,குழுமத்தின் மொத்த வருமானம் ரூ. 12,909 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ.9,912 கோடியை விட 30 சதவிகிதம் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.குறிப்பாக, என்.எல்.சி., நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 2,245 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ரூ. 1,754 கோடியாக இருந்தது.இது 28 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றார்.