சட்டசபை தேர்தலை மிஞ்சும் என்.எல்.சி., தேர்தல் பணப்பட்டுவாடா, மது விருந்து படுஜோர்
என்.எல்.சி.,யில் வரும் 25ம் தேதி அங்கீரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கான ரகசிய ஓட்டெடுப்பு நடக்கிறது. தேர்தலில் தொ.மு.ச., - அ.தொ.ஊ.ச., - பா.தொ.ச., சி.ஐ.டி.யூ., - தி.தொ.ஊ.ச., - பி.எம்.எஸ்., ஆகிய 6 தொழிற்சங்கங்கள் களத்தில் உள்ளன. நெய்வேலி சட்டசபை தொகுதியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் தேர்தல் என்பதால் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், முன்னாள் அமைச்சர்கள் சம்பத், செல்வி ராமஜெயம், எம்.பி.,க்கள் சண்முகம், விஷ்ணு பிரசாத், வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், அருண்மொழித்தேவன், பாண்டியன், ராதாகிருஷ்ணன், சிந்தனைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்., சொரத்துார் ராஜேந்திரன், சிவசுப்பிரமணியன், முருகுமாறன் என முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் தங்களின் தொழிற்சங்களுக்கு ஆதரவாக நெய்வேலி நகரில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளர்.என்.எல்.சி., நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் என்பதால் அதன் அங்கீகாரத்தை பெற்று அதிகாரத்தை கைப்பற்ற அனைத்து அரசியல் கட்சியினரும் போட்டிப் போட்டுக் கொண்டு நெய்வேலிக்கு விசிட் அடிக்கின்றனர்.என்.எல்.சி.,யில் பணிபுரியும் 6,578 தொழிலாளர்களில் 3,400 ஓட்டுகளை பெறும் ஒரு சங்கம் அல்லது இரண்டு சங்கம் என்.எல்.சி.,யின் அங்கீகாரத்தை பெற உள்ளன. குறிப்பாக, தொ.மு.ச., வில் மட்டுமே 3,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தி.மு.க.,வின் கூட்டணிக்கட்சி தொழிற்சங்கங்களும் தொ.மு.ச., வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தொ.மு.ச., சிங்கிள் மெஜாரிட்டியை பெறும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. எனினும், கடந்த 4 ஆண்டுகளில் தொமு.ச., நிர்வாகிகள் சிலர் புகாருக்கு உள்ளானதால் தொ.மு.ச., உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி கூட்டணிக்கட்சியை சார்ந்த தொழிற்சங்க உறுப்பினர்களிடமும் அதிருப்தி நிலவுகிறது. இதனால் தொமு.ச.,வுக்கு சிங்கிள் மெஜாரிட்டி கிடைக்குமா என்ற சந்தேகம் தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அ.தொ.ஊ.ச., மற்றும் பா.தொ.ச., உள்ளிட்ட பிற சங்கங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கின்றன. இதுதவிர இரண்டு சங்கங்கள் பணப்பட்டுவாடாவும் செய்து வருகின்றன. உற்சாக பானத்துக்கும், மது விருந்துக்கும் குறைவில்லை. இதனால் ரகசிய ஓட்டெடுப்பு பிரசாரம், சட்டபை தேர்தலை விடவும் களை கட்டுவதால் தொழிலாளர்கள் குஷியாக உள்ளனர். என்.எல்.சி., தொழிற்சங்க தேர்தல் முடிவுகள் தமிழக அளவில் உள்ள தொழிற்சங்கங்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட போச்சே
கடந்த 16ம் தேதி மனுத்தாக்கல் முடிந்தவுடன் மறுநாள் தொழிற்சங்கங்களுக்கான சின்னம் அதாவது எண்கள் அறிவிக்கப்பட்டது. தங்களுக்கான எண் அறிவிப்பதற்கு முன்பாகவே, குறிப்பிட்ட எண்தான் தங்களுக்கு கிடைக்கும் என்று நம்பிய ஒரு தொழிற்சங்கம் குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் தங்களது எண் கொண்ட டோக்கன் கொடுத்தவர்களுக்கு பெட்ரோல் போடுங்கள் என்று கூறினர். பலரும் பெட்ரோல் போட்டுக்கொண்ட நிலையில், அந்த சங்கத்திற்கு வேறு எண் மாறி வந்து விட்டதால், வட போச்சே என வடிவேலு ஸ்டைலில் சங்கத்தினர் புலம்பினர்.