பிச்சாவரத்தில் காணும் பொங்கல் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கிள்ளை: காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செல்கின்றனர். நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் காலை முதலே பிச்சாவரத்தில் குவிந்தனர்.வனக்காடுகளை சுற்றிபார்க்க படகில், அனைவரும் ஒரே நேரத்தில் செல்ல முடியாததால், பலர் சுற்றுலா மையத்தில் பல மணி நேரம் காத்திருந்து, படகில் வனக்காடுகளுக்கு சென்று இயற்கை அழகை ரசித்து சென்றனர். படகில் செல்ல முடியாதவர்கள் சுற்றுலா மையத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி அங்கிருந்தபடியே வனக்காடுகளை கண்டுகளித்து சென்றனர்.