கோவில் திருவிழா பிரச்னை தாலுகா அலுவலகத்தில் தர்ணா
புவனகிரி: புவனகிரி தாலுகா, வேளங்கிப்பட்டு துர்க்கை அம்மன் கோவிலில் தாசில்தார் உத்தரவை மீறி செயல்படும் நிலையை கண்டித்த தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். புவனகிரி அடுத்த வேளங்கிப்பட்டு கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா காலங்களில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. இந்த ஆண்டு விழா நடத்துவது தொடர்பாக புவனகிரி தாலுகா அலுவலகத்தில், கடந்த 2 ம் தேதி அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டம் நடந்தது. அப்போது தாசில்தார் அன்பழகன் ஊஞ்சல் உற்சவம் நடத்த தடை விதித்தும், மற்ற நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தார். அதன் பின் விழா துவங்கியது. இந் நிலையில், மீண்டும் பிரச்னைக்குரிய ஊஞசல் உற்சவம் நடத்த சிலர் போலீசார் உதவியுடன் ஆயத்தமாகினர். அதற்கு எதிர்ப்ப்பு தெரிவித்தும், தாசில்தார் உத்தரவை பின் மாற்றக்கோரியும், புவனகிரி தாலுகா அலுவலகத்தில் நாடார் பேரவை கிழக்கு மாவட்ட செயலாளர் கிள்ளைராஜவேல் தலைமையில் அப்பகுதியினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் பேச்சுவார்த்திய பின் ,அவர்கள் கலைந்துச்சென்றனர்.