உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தேவை:  30 கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு

பெண்ணாடத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தேவை:  30 கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும் என, 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலுார் மாவட்டத்தில், பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள தி.அகரம், இறையூர், எடையூர், கோவிலுார், சவுந்திரசோழபுரம், செம்பேரி, கிளிமங்கலம், மோசட்டை, குறுக்கத்தஞ்சேரி, நந்தப்பாடி, வெண்கரும்பூர், முருகன்குடி, துறையூர், கொசப்பள்ளம், மாளிகைக்கோட்டம், இருளம்பட்டு, பாசிக்குளம், பெலாந்துறை, கணபதிகுறிச்சி உட்பட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு 1 லட்சம் ஏக்கர் பரப்பிலான சாகுபடி நிலங்கள் உள்ளன. இதில், மோட்டார் பாசனம் மூலம் சம்பா, குறுவை ஆகிய இரு பட்டங்களில் நெல்லும், மானாவாரி பட்டத்தில் மக்காசோளம், உளுந்து, வரகு, வேர்க்கடலை, சோளம், கம்பு, எள், கேழ்வரகு மற்றும் பயறு வகைகள் உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் பயிரிடு கின்றனர். அறுவடை செய்யும் நெல் மற்றும் மானாவாரி விளை பொருட்களை விற்பதற்கு 20 கி.மீ., துாரமுள்ள விருத்தாசலமும்; 18 கி.மீ., துாரமுள்ள திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு அதிக வாடகைக்கு வாகனங்கள் எடுத்துச்செல்லும் நிலை உள்ளது. இதனைப் பயன்படுத்தி அறுவடை காலங்களில் சில வியாபாரிகளும், புரோக்கர்களும் நேரடியாக நெல் வயல்களுக்கு சென்று விவசாயிகளிடம் நெல்லை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். அதில், சில வியாபாரிகள் விவசாயிகளிடம் நடவு செய்யும்போதே விதை நெல், இடுபொருட்களை வாங்கிக்கொடுத்து, அந்த தொகைக்கு ஏற்ப அறுவடை காலங்களில் வட்டி கணக்கீடு செய்து நெல்லை வாங்கி செல்கின்றனர். இதனால் அதிக செலவு செய்து அறுவடை காலங்களில் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விவசாயிகள் விற்பது வாடிக்கையாக உள்ளது. அதனால், விவசாயிகளின் நலன்கருதி, பெண்ணாடத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

லாபம் பெற வாய்ப்பு

திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதியில், பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சியாகவும், குறுவட்ட தலைமையிடமாகவும் உள்ளது. பின்தங்கிய பகுதியான பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டால், இடைத்தரகர்கள் இன்றி இப்பகுதி லாபம் பெற வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ