குழந்தை இறந்ததால் ஆத்திரம் மருத்துவமனையை உறவினர் முற்றுகை
விருத்தாசலம்: பிறந்த குழந்தை இறந்த ஆத்திரத்தில் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. .விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இளம்பெண் ஒருவர், பிரசவத்திற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 17ம் தேதி சுகப்பிரசவமாக ஆண் குழந்தை பிறந்த நிலையில், மூளைக்கு ஆக்சிஜன் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர், பிரசவ கால சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கத்தை ஏற்று, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.