3 மாதத்திற்கு ஒரு முறை நகரமன்ற கூட்டம் பண்ருட்டியில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு ஆளும் கட்சி கவுன்சிலர்களும் அதிருப்தி
நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் கடந்த 6 மாதங்களில் 2 முறை மட்டும் நடந்துள்ளது. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி கவுன்சிலர்கள் மட்டுமின்றி ஆளும் கட்சி கவுன்சிலர்களும் மக்களை எப்படி சந்திப்பது என புலம்புகின்றனர்.நகர மன்ற இயல்பு கூட்டம் மாதம் ஒரு முறை சாதாரண கூட்டமும், ஒரு சிறப்பு கூட்டமும் நடத்திட வேண்டும். கூட்டத்தில் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.அதன் அடிப்படையில் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளப்படும்.ஆனால் பண்ருட்டி நகராட்சியில் 3 மாதத்திற்கு ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் 2 கூட்டம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.இதனால், வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பை அள்ளும் துாய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது, வாகனங்களுக்கு டீசல் போடுவது என அலுவலக பணிகளும் பாதித்துள்ளது. நகர பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இதனால், எதிர்கட்சி கவுன்சிலர்கள் மட்டுமின்றி ஆளும் கட்சி கவுன்சிலர்களும் தங்கள் பகுதி மக்களிடம் அவப்பெயர் ஏற்படுவதாக புலம்பி வருகின்றனர்.மேலும், இதே நிலை நீடித்தால் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து எதிர்கட்சி கவுன்சிலர்கள் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.