உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணிமுக்தாற்றில் கொள்ளை போகும் மணல் போலீசார் குறட்டை

மணிமுக்தாற்றில் கொள்ளை போகும் மணல் போலீசார் குறட்டை

விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டி, பைக் உள்ளிட்ட வாகனங்களில் ஆற்று மணல் கடத்துவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க டயர் வண்டி செல்லும் ஓரிரு வழிகளை போலீசார் ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டி, பாதையை தடுத்துள்ளனர். இருந்தும், வேறு வழிகளில் மாட்டு வண்டி, பைக் உள்ளிட்டவைகளில் இரவு நேரங்களில் ஆற்று மணல் திருடிச் செல்வது தொடர் கதையாக உள்ளது. ராமச்சந்திரன்பேட்டை, பழமலைநாதர் நகர், நாச்சியார்பேட்டை பகுதிகளில் உள்ள மணிமுக்தாற்றில், பகல் நேரங்களில், ஆண்கள், பெண்கள் பலர் நடந்து சென்று சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளிச் செல்கின்றனர். சில மாதங்களாக குறைந்திருந்த மணல் திருட்டு, தற்போது, அதிகரித்துள்ளது. பெரும்பாலும், இந்த பகுதிகளில் புதிதாக கட்டுமானம் மேற்கொள்ளும் சிலர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மேலும், சிலர் சாக்கு மூட்டைகளில் கொண்டு வரும் மணல்களை குவித்து வைத்து, வெளியூர்களுக்கு லாரியின் மூலம் அனுப்பி வைக்கின்றனர். தற்போது, ஆற்றில், இடுப்பளவு தண்ணீர் செல்லும் நிலையில், அதில், ஆபத்தை உணராமல் தலையில் மணல் மூட்டைகளை சுமந்து செல்கின்றனர். தொடர்ச்சியாக பகல் நேரங்களில் நடக்கும் இந்த மணல் திருட்டு, போலீசாருக்கு தெரியாமலா நடக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ