உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூர் அருகே பள்ளி பஸ்கள் மோதல்; 9 மாணவர்கள் காயம்

வேப்பூர் அருகே பள்ளி பஸ்கள் மோதல்; 9 மாணவர்கள் காயம்

வேப்பூர் : வேப்பூர் அருகே தனியார் கல்வி நிறுவன பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 9 மாணவர்கள் காயமடைந்தனர்.வேப்பூர் அருகேயுள்ள தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 51ம் எண் (டி.என்., 31 ஏஎல் 7940), 104ம் எண் (டி.என்., 91 எபி 4056) இரண்டு பஸ்கள், மாணவர்களை ஏற்றி கொண்டு கல்வி நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தது. 51ம் எண் பஸ்சை வேப்பூர் அடுத்த சாத்தியத்தைச் சேர்ந்த முத்தையா, 34, என்பவரும், 104ம் எண் பஸ்சை கீழ் ஆதனுாரைச் சேர்ந்த மாயவன், 46, என்பவரும் ஓட்டினர்.இந்நிலையில், நேற்று காலை 9:30 மணியளவில் மங்களூர் - பாசார் சாலையில், பாசார் கிராமத்திலுள்ள வேகத்தடை அருகே வந்த போது, முன்னால் சென்ற 104ம் எண் பஸ் திடீரென பிரேக் போட்டது. இதனை எதிர்பாராமல் பின்னால் வேகமாக வந்த 51ம் எண் பஸ், முன்னாள் சென்ற 104ம் எண் பஸ் மீது மோதியது. இதில், தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 6 கல்லுாரி மாணவர்கள், 3 பள்ளி மாணவர்கள் லேசான காயமடைந்தனர். உடன் அவர்களை மீட்டு, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையறிந்த அப்பகுதி மக்கள், இரண்டு டிரைவர்களையும், பஸ்களையும் சிறை பிடித்தனர். தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார் மக்களை சமரசம் செய்து, டிரைவர்களையும், பஸ்சையும் மீட்டு விசாரித்தனர். அதில், இரண்டு பேரும் போட்டி போட்டு கொண்டு கல்வி நிறுவனத்திற்கு பஸ்சை வேகமாக ஓட்டிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ