சம்பா நெல் மகசூலை அதிகரிக்க மானியத்தில் மருந்து
புவனகிரி: சம்பா நெல் மகசூலை அதிகரிக்கவும், நெல் பயிரில் நுண்ணுாட்டச்சத்து குறைபாட்டை தடுக்கவும், மானியத்தில் மருந்து பொருட்களை வாங்கி பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேல்புவனகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் செய்தி குறிப்பு: வட்டாரத்தில் சம்பா பருவத்தில் 10 ஆயிரத்து 450 எக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது நெற்பயிர்கள் 10 முதல் 30 நாட்கள் பயிராக உள்ளது. வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்தபோது, நெற்பயிரில் நுண்ணுாட்டச்சத்து குறைபாடு குறிப்பாக துத்தநாகசத்து பற்றாக்குறை காணப்படுகிறது. இதனால், நெல் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மகசூல் குறைந்துவிடும் வாய்ப்புள்ளது. அதற்கு தீர்வாக, மேல் புவனகிரி வட்டார விவசாயிகள் நலன் கருதி வண்டுராயன்பட்டு, சேத்தியாத்தோப்பு வேளாண்மை விரிவாக்க மையங்களில் சிங்க் சல்பேட் மற்றும் நெல் நுண்ணுாட்டக்கலவை, 60 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.