புயலில் வீடு இழந்தவர்கள் தொடர்ந்து சமூதாயக் கூடத்தில் தங்கியிருக்கும் அவலம்
நெல்லிக்குப்பம்: புயலால் வீட்டை இழந்த நிலையில் புதிய வீடு அல்லது அரசு மாற்று ஏற்பாடு செய்யாததால் வீடுகளை இழந்தவர்கள் தொடர்ந்து சமுதாய கூடத்தில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதி நவம்பர் மாதம் வீசிய பெஞ்சல் புயலால் பெரிதும் பாதித்தது.வான்பாக்கம்,முள்ளிகிராம்பட்டு உட்பட பல பகுதிகளை பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.இதில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமானது.வான்பாக்கத்தில்கிருஷ்ணவேணி,ரேவதி,ஏகாம்பரம்,செல்வம்,கஸ்தூரி,தேவனாதன்,பாப்பாத்தி, அஜந்தா, சங்கர் ஆகியோரது வீடுகள் உட்பட பல வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தது.இதனால் அவர்கள் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.அமைச்சர் கணேசன் அப்போது பார்வையிட்டு இடிந்த வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டி தரப்படும் என உறுதியளித்தார்.பாதித்த மக்களும் அரசாங்கம் வீடு கட்டி தரும் என நம்பியிருந்தனர்.ஆனால் அவர்களுக்கு அரசு அறிவித்த நிவாணரம் கூட கிடைக்கவில்லை.தங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கி வீடு கட்டி தர வேண்டுமென கலெக்டரிடம் மனு கொடுத்தும் இது வரை நிவாரணம் வழங்கவில்லை.இதனால் இடிந்த வீட்டை புதுப்பிக்க முடியாமல் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கியுள்ளனர்.அதேபோல் முள்ளிகிராம்பட்டில் வீடுகளை இழந்த 64 பேரில் 4 பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்தது. மற்றவர்களுக்கு நிவாரணம் கிடைக்காமல், தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழி செய்து,அவர்கள் இயல்புநிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.