விபத்தில் இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கடலுார்; நெல்லிக்குப்பத்தில் சாலை விபத்தில் இறந்த வாலிபரின் உடலை வாங்க மறுத்து, மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் அண்ணா நகரை சேர்ந்தவர் சதீஷ், 23. இவர், நேற்று முன்தினம் நெல்லிக்குப்பத்திலிருந்து பைக்கில் கடலுார் வந்தபோது, மினிவேன் மோதி இறந்தார். சதீஷின் உடல் நேற்று கடலுார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இந்நிலையில், சதீஷின் இறப்புக்கு காரணமான வாகனத்தை கண்டுபிடித்தால் தான், உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்தனர். துணைமேயர் தாமரைச்செல்வன், வி.சி.,மாநகர மாவட்டசெயலாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள், உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்த திரண்டனர்.போலீசார், பேச்சுவார்த்தை, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, உறவினர்கள் உடலை பெற்று கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.