பல்நோக்கு மையம் நிர்வகிக்கும் பொறுப்பு சுய உதவிக் குழுவினரிடம் ஒப்படைப்பு
கடலுார்: பல்நோக்கு மையம் மற்றும் சமுதாயக்கூடம் நிர்வகிக்கும் பொறுப்பிற்கான சாவியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கினார். காட்டுமன்னார்கோயில் வட்டம், பழஞ்சநல்லுார் பகுதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையம் மற்றும் திட்டக்குடி அடுத்த எ.அகரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடங்களை நிர்வகிக்க செம்பருத்தி மற்றும் முல்லை பழங்குடியினர் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சாவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் சாவியை ஒப்படைத்தார். பின், அவர் பேசுகையில், பழஞ்சநல்லுார் பல்நோக்கு மையத்தினை அப்பகுதியில் செயல்பட்டு வரும் செம்பருத்தி பழங்குடியினர் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும், எ.அகரம் பகுதி சமுதாயக் கூடம் அப்பகுதியில் செயல்பட்டு வரும் முல்லை பழங்குடியினர் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நிர்வகிக்கவும், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணி காக்கும் வகையில் கட்டடத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் சுய உதவிக் குழுவினருக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுவதோடு, குறைந்த கட்டணத்தில் நிகழ்ச்சிகளை பொதுமக்கள் நடத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அரசு வழிகாட்டுதலின்படி முறையாக பராமரிக்க மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது' என்றார். நிகழ்ச்சியில் தாட்கோ மேலாளர் அருள்முருகன், தாட்கோ செயற் பொறியாளர் நடராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.