மாநிலத்திலேயே சிறந்த உட்கோட்டம் விருத்தாசலம் :டி.எஸ்.பி., பெருமிதம்
விருத்தாசலம்: விருத்தாசலம் உட்கோட்டத்தில் இருந்த 1,680 நிலுவை வழக்குகளை முடித்து, மாநிலத்திலேயே சிறந்த உட்கோட்டமாக பெயர் பெற்றுள்ளது என டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.விருத்தாசலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, 'விருத்தாசலத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 1,680 வழக்குகளும் முடிக்கப்பட்டு, மாநிலத்திலேயே சிறந்த உட்கோட்டம் என்ற பெயர் பெற்றுள்ளது. மணல், கூழாங்கற்கள் உள்ளிட்ட கனிமவளங்கள் கடத்தலில் ஈடுபட்ட 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிரைவர்கள், உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுபாட்டில், கஞ்சா, லாட்டரி போன்ற சட்ட விரோத விற்பனையில் ஈடுபடுவோர், வயதான நபர்களாக இருந்தாலும், மாணவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனை மற்றும் பஸ் நிலையத்தில் இரவு நேர டீக்கடை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வணிகர் சங்க பிரதிநிதிகளே முன்வந்து, இரு இடங்களில் மட்டும் டீக்கடைக்கு அனுமதி கோரினால், போலீஸ் பாதுகாப்பு தரப்படும்.சர்வீஸ் சாலை இல்லாமல், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவதால், புறவழிச்சாலையில் விபத்துகள் நிகழ்கிறது. இதை தடுக்கவே இரவு நேரத்தில் தேவையற்ற இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இன்ஸ்பெக்டர் கவிதா உடனிருந்தார்.