காத்திருப்பு போராட்டம் வாபஸ்
புவனகிரி: புவனகிரி பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற இரந்த காத்திருப்பு போராட்டம் தாசில்தார் பேச்சுவார்த்தையால் கை விடப்பட்டது. புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் பகுதி மக்கள், குடிநீர் பிரச்னையை கண்டித்து , பேரூராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் தாசில்தார் ஷானாஸ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. பேரூராட்சி தலைவர் கந்தன், செயல் அலுவலர் அண்ணாதுரை, கவுன்சிலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஆதிவராகநத்தம் பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளது. வருவாய் துறை அளவீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்பை அகற்றி, குழாய்கள் பதித்து குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தனர். அதனையேற்று கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.