எங்கே செல்லும் இந்த பாதை.... நகரில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர் மீட்டு மறுவாழ்வு அளிக்கப்படுமா?
விருத்தாசலம் நகரில் விருத்தகிரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியோர் அமர்ந்து கொண்டு யாசகம் பெறுகின்றனர். பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக யாசகம் கேட்டு தொந்தரவு செய்வதுடன், அவர்களுக்குள் சண்டையிட்டு ஆபாசமாக திட்டிக் கொள்கின்றனர்.இவர்கள் அப்பகுதியிலேயே இயற்கை உபாதையை கழிப்பதுடன், மீதம் உள்ள உணவுப் பொருட்களை வீசுவதால் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், சிலர் மது அருந்துவிட்டு போதையில் ஆடைகள் களைந்த நிலையில் கிடக்கின்றனர். 25க்கும் மேற்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் கிராமங்களில் இருந்து வந்து யாசகம் பெற்று, இரவு வீட்டிற்கு திரும்பிச் செல்கின்றனர்.இவர்கள் பாதசாரிகள், ஓட்டல், டீ கடைகளுக்கு வருவோரையும் விட்டு வைப்பதில்லை. வயது முதிர்வை காரணம் காட்டி, தினசரி தொழிலாக யாசகம் பெறும் நிலையில் பலர் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே, விருத்தாசலம் நகரில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கவும், யாசகம் பெறுவதையே தொழிலாக கொண்ட நபர்களை எச்சரித்து உரியவர்களிடம் ஒப்படைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.