கணவர் சாவில் சந்தேகம் என மனைவி புகார்; சுடுகாட்டில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாக மனைவி கொடுத்த புகாரின் பேரில், சுடுகாட்டில் எரிக்கப்பட்ட சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த எடையாரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுபாஷ், 35; கூலித்தொழிலாளி. இவரது மனைவி அனுசுயா, 29; இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த இரு மாதங்களாக அனுசுயா ராயநல்லுாரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகின்றார். சுபாஷ், மனைவி அனுசுயாவை சமாதானம் செய்து குடும்ப நடத்த வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அவர் மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சுபாஷ் நேற்று துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரித்தனர். தகவல் அறிந்த அனுசுயா, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சொத்தில் பங்கு வேண்டும் என கூறி காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் அளித்து, உறவினர்களுடன் முற்றுகையிட்டார்.போலீசார் எடையார் சுடுகாட்டிற்கு சென்று எரியூட்டப்பட்ட மேடையை கலைத்து சடலத்தை கைப்பற்றினர். எரிந்த நிலையில் இருந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.