கொளஞ்சியப்பர் கோவிலில் தங்கும் விடுதி சீரமைக்கப்படுமா? வெளியூர் பக்தர்கள் இட வசதியின்றி பாதிப்பு
விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் வெளியூர் பக்தர்கள் நலன் கருதி தங்கும் விடுதி, திருமண மண்டபத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் உள்ளது. சுவாமியிடம் வேண்டி, முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால், 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் நிறைவேறும் என்பது ஐதீகம். இதற்காக, வெளி மாநில மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள் பலரும் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சத்தமின்றி வந்து செல்வது வாடிக்கை. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சட்டசபை தேர்தலுக்கு முன், கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து வேண்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. அதுபோல், சினிமா பிரபலங்கள் பலரும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்வதால், 1974ம் ஆண்டில், கோவில் வளாகத்தில் 10 அறைகள் அடங்கிய தங்கும் விடுதி கட்டப்பட்டது. பின்னர், 2005ல் விடுதி வளாகத்தை சீரமைத்து, பக்தர்கள் விடுதியில் முதல் தளம் அமைத்து கூடுதலாக 11 அறைகள் கட்டப்பட்டன. இதிலிருந்து பெரும் வாடகை மூலம் விடுதி மின்கட்டணம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடந்தன. நாளடைவில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறியதுடன், பயன்படுத்த லாயக்கற்ற நிலைக்கு மாறியது. விடுதியில் உள்ள அறைகள் சேதமடைந்து, அங்குள்ள பொருட்கள் சேதமடைந்து விட்டன. எனவே, வெளியூர் பக்தர்கள் நலன் கருதி விடுதியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.அதுபோல், விசேஷ நாட்களில் சுவாமி சன்னதியில் நுாற்றுக்கணக்கான திருமணங்கள், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடக்கின்றன. இதனால் கோவில் வளாகம் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும். அப்போது சுவாமி சன்னதியில் திருமணம் முடித்து, கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும், காலை மற்றும் மதிய உணவு உபசரிப்பு நடக்கும்.தற்போது மண்டபத்தில் போதுமான மின் விசிறிகள் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதியை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.