திட்டமிட்டப்படி நகராட்சி கூட்டம் நடக்குமா? நெல்லிக்குப்பம் கவுன்சிலர்கள் மத்தியில் குழப்பம்
நெ ல்லிக்குப்பம் நகராட்சியில் நடக்கும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கும் டெண்டர் விடுவது வழக்கம். டெண்டர் குறித்த விவரங்கள் நகராட்சியில் தீர்மானமாக வைத்து ஒப்புதல் பெற்ற பிறகே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பணி செய்வதற்கான ஆணையை வழங்குவது வழக்கமாகும். ஆனால் கடந்த மே மாதம் நடந்த நகராட்சி கூட்டத்தில் பல கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு டெண்டர் விவரங்கள் தீர்மானமாக இடம் பெறவில்லை. இது தொடர்பாக கவுன்சிலர்கள் விளக்கம் கேட்டதற்கு திட்டப் பணிகளுக்கான டெண்டர் விவரங்களை நகரமன்ற கூட்டத்தில் தீர்மானமாக வைக்க தேவையில்லை என, அரசாணை இருப்பதாக கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறினார். இதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானங்களை நிறைவேற்றாமல் நகராட்சி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. நகராட்சியின் ஒப்புதலோடு தான் அனைத்து டெண்டர்களையும் வழங்க வேண்டுமென கவுன்சிலர் பூபாலன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நாளை 31ம் தேதி 80 தீர்மானங்களுடன் நகராட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதிலும் பல கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கான டெண்டர்கள் தீர்மானத்தில் இடம் பெறவில்லை என தகவல் கிடைத்துள்ளதால் கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், நகராட்சி கூட்டம் திட்டமிடப்பட்டப்படி நடக்குமா அல்லது, கடந்த கூட்டத்தை போன்று ஒத்திவைக்கப்படுமா என்ற குழப்பம் கவுன்சிலர்கள் மத்தியில் நிலவுகிறது.