மேலும் செய்திகள்
பறிமுதல் வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்
20-Jul-2025
புதுச்சேரியில் இருந்து கடலுார் மாவட்டத்திற்கு மதுபாட்டில் கடத்தி வரும் வாகனங்களை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து அலுவலக வளாகத்தில் வைத்திருப்பது வழக்கம். இந்த வாகனங்கள் மக்கி மண்ணாகி போவதை விட அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில், ஏலம் விட்டு பணமாக்கி விடுகின்றனர். அவ்வாறு ஏலம் விடப்படும் வாகனங்கள் உரிமையாளர்களுக்கு முன்னுரிமையும், உரிமையாளர் எடுக்க தவறினால் பொது ஏலத்திலும் வாகனங்களை போலீசார் ஏலம் விடுகின்றனர். அதன்படி கடந்த 31ம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடலுாரில் பொதுமக்கள் மத்தியில் ஏலம் நடந்தது. எஸ்.பி., ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஏலம் தீவிரமாக நடந்து கொண்டிந்தபோது, திடீரென ஒரு பெண், எஸ்.பி., ஜெயக்குமார் காலை பிடித்து அழுதார். 'போலீசாரால் பறிமுதல் செய்து ஏலத்திற்கு தயாராக நிறுத்திய வாகனத்தில் எங்கள் வாகனமும் ஒன்று. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் பார்த்தபோது, அனைத்து 'ஸ்பேர் பார்ட்ஸ்' களும் இருந்தன. ஆனால் தற்போது செயின் பிராக்கட் உட்பட பல்வேறு பொருட்கள் காணாமல் போயுள்ளது ஐயா' என்றார். அதற்கு எஸ்.பி., நாங்கள் இங்கு மெக்கானிக் வேலை பார்க்கவில்லை. பொருட்களை கழற்றுவதற்கு, என்று பதிலளித்தார். இருப்பினும் சம்மந்தப்பட்ட டி.எஸ்.பி., யை அழைத்து இந்த வாகனத்தில் இருந்த 'ஸ்பேர் பார்ட்ஸ்' எங்கே போனது. நம்மை பற்றி பொதுமக்கள் என்ன நினைப்பார்கள். இதை கழற்றியவர்கள் உடனடியாக வாங்கிக் கொடுக்க வேண்டும். இல்லையேல் கழற்றியவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என எஸ்.பி., 'செம' டோஸ் விட்டார். சற்றும் எதிர்பார்க்காத போலீசார் உடனடியாக டூ விலரை எடுத்துச் சென்று புதியதாக மாற்றி வாகன உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இது போன்று ஆயிரக்கணக்கான வாகனங்களை பதம் பார்த்தவர்கள், இந்த வாகனத்தில் சிக்கிக் கொண்டனர் என ஏலம் எடுக்க வந்தவர்கள் முணுமுணுத்தனர்.
20-Jul-2025