யானை கொல்லப்பட்ட வனப்பகுதியில் சிக்கிய துப்பாக்கி சிதறல், வெடிமருந்து
தர்மபுரி,: பென்னாகரம் அருகே ஏமனுார் வனப்பகுதியில், நாட்டு துப்பாக்கி பாகம், வெடி மருந்து கண்டறியப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வனச்சரகத்தில் ஏமனுார் அருகே, கடந்த, 1ம் தேதி தந்தத்திற்காக யானை வேட்டையாடப்பட்டு, எரிக்கப்பட்டது. இதுகுறித்து, வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தை தடுக்க தவறியதாக, வன அலுவலர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்தனர். இதில், யானை கொல்லப்பட்டது குறித்து, மார்ச் ௧௩ல் விரிவான அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் வெளியிட்டுஉள்ள அறிக்கை: தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, முதன்மை தலைமை வன காவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா, தர்மபுரி மாவட்டம் ஏமனுார் வனப்பகுதியில், யானை வேட்டையாடப்பட்ட பகுதியை, நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். பென்னாகரம் வனச்சரக குழு மற்றும் தனி குழுவினர், தீவிர தேடுதல் மேற்கொண்டதில், கோட்ட திண்டுக்காடு கிராமத்தில், நாட்டு துப்பாக்கி பாகங்கள், வெடிபொருள், வெடிமருந்து, சுருக்கு கம்பி கண்டறியப்பட்டது. இதுகுறித்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.