ஏரியில் உடல் அடக்கம்: 27 பேர் மீது வழக்கு
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அருகே பட்டுகோணாம்பட்டி, ஆலமரத்துார் கிராமத்தை சேர்ந்த மக்கள், அங்குள்ள செங்குட்டை ஏரியை மயானமாக பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து, மோட்டுபட்டியை சேர்ந்த சந்திரன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி நீர் நிலை புறம்போக்கு நிலங்களை மயானமாக பயன்படுத்த கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆலமரத்துாரை சேர்ந்த மாரி, 65, என்பவர் இறந்தார். அவரது உடலை செங்குட்டை ஏரியில் புதைக்க ஏற்பாடு செய்தனர். இதையறிந்து பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சின்னா உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள், மயானத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உடல் அடக்கம் செய்ய அறிவுறுத்தினர். ஆனால் அதையும் மீறி ஏரியில் உடலை அடக்கம் செய்தனர். இது குறித்து பட்டுகோணாம்பட்டி வி.ஏ.ஓ., சக்திவேல் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து மாரி மகன் கோவிந்தராஜ், 45, உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறந்த மாரி உடலை மோட்டுப்பட்டி சந்திரன், 65, வீட்டு வாசலில் வைத்து தகாத வார்த்தையால் திட்டி தாக்க முற்பட்டதாக கொடுத்த புகார்படி, ஆலமரத்துார் முருகன், 52, கோவிந்தன், 41, உள்பட 7 பேர் மீது பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.