ஹெல்மெட் அணியாத ஊழியர்களுக்கு கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் அபராதம்
தர்மபுரி:கலெக்டர் உத்தரவையும் மீறி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் வந்த தர்மபுரி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 22 பேருக்கு, அலுவலக வளாகத்திலேயே போலீசார் அபராதம் விதித்தனர்.தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும், கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் போது, கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என, தர்மபுரி கலெக்டர் சதீஸ் கடந்த மாதம் உத்தரவிட்டார்.இதை சிலர் மட்டுமே கடைப்பிடித்த நிலையில், மற்றவர்கள் கலெக்டர் உத்தரவை கண்டு கொள்ளவில்லை. இதனால், பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் அலுவலர்களுக்கு அபராதம் விதிக்க, போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.தர்மபுரி டவுன் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.,க்கள் சரவணன், சதீஷ் ஆகியோர், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் நேற்று சோதனையில் ஈடுபட்டு, ஹெல்மெட் அணியாமல் வந்த அரசு அலுவலர்களுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.அப்போது, 'அரசு ஊழியர்களாகிய எங்களுக்கே அபராதமா?' என, போலீசாரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் அபராதத்தை தவிர்க்க, மாற்று நுழைவாயில் வழியாக அலுவலகம் சென்றனர். நேற்று நடந்த ஹெல்மெட் சோதனையின் போது, 22 அரசு அலுவலர்களுக்கு தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.