உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அம்மா உணவகத்தில் ஆய்வு
தர்மபுரி, தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் செயல்படும் அம்மா உணவகத்தில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தர்மபுரி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம், உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமை ஆசிரியர் சுதா தலைமை வகித்தார். தர்மபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், உணவு பொருட்களில் தேயிலை, தேன், நெய், பச்சை பட்டாணி, சமையல் எண்ணெய், மிளகு, வெல்லம் உள்ளிட்ட உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறிதல், அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு அறிதல், உணவு பொருள் தயாரிப்பு, உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், அலர்ஜி தன்மை குறித்து, செயல் விளக்கம் அளித்தார்.இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திகேயன், உணவு பகுப்பாய்வு குறித்து விளக்கம் அளித்தார். முன்னதாக, தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உணவு பொருட்களை தரமாக சமைத்து பரிமாற வேண்டும். சமையல் கூடத்தை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தினார்.