மயானத்திற்கு வழியின்றி வரப்பில் சடலத்தை துாக்கி செல்லும் நிலை
தர்மபுரி :தர்மபுரி அடுத்த செட்டிகரையில், 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட இன குடும்பத்தினர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் கூலித்தொழிலாளிகள். இப்பகுதியிலிருந்து மயானத்திற்கு, 2 கி.மீ., துாரமுள்ளது. ஆனால், சடலத்தை எடுத்து செல்ல சாலை வசதி இல்லை. வயல் வரப்புகளுக்கு இடையேயும், ஏரிக்கால்வாய் வழியிலும் சென்று தான், சடலத்தை அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில், செட்டிகரையை சேர்ந்த ரத்னா, 65, என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரை நேற்று அடக்கம் செய்ய ஒற்றையடி பாதையில் எடுத்து சென்றபோது, தற்போது பெய்த மழையால் சேரும் சகதியுமான சாலையில் தடுமாறியபடி சடலத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது.