கோபால் சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்
பாப்பாரப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே, மலையூர் பகுதியில் மிகவும் பழமையான கோபால்சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத அமாவாசை அடுத்த, 3ம் நாள் திருக்கல்யாண வைபவம் நடப்பது வழக்கம். அதன்படி சுவாமி திருக்கல்யாண வைபவத்தையொட்டி, நேற்று காலை முதல் மூலவருக்கு பால், தயிர், பன்னீர், திருநீர், பழங்கள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோபால்சுவாமிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.இதில், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பிக்கிலி, மலையூர், புதுகரம்பு, தாசம்பட்டி, பவளந்துார், பென்னாகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்திருந்த, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பென்னாகரம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.