| ADDED : ஆக 13, 2024 11:52 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரில் செயல்படும் 79 திருமண மண்டபங்களின் அனுமதி விவரம்,பாதுகாப்பு,சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்க மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. திண்டுக்கல் நகரில் பொது மக்கள் திருமணம்,காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்துகின்றனர். பல இடங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மக்கள் விபத்துக்களில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் திண்டுக்கல் நகரில் செயல்படும் 79 திருமண மண்டபங்களை தேர்வு செய்து அதன் உரிமையாளர்களிடம், தங்களுடைய கட்டடங்களுக்கு முறையாக பெறப்பட்ட அனுமதி, கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு, திருமண மண்டபத்தில் எத்தனை பேர் இருக்கலாம், சமையலறையின் பாதுகாப்பு விவரம்,வாகனங்கள் நிறுத்துமிடம்,தற்போதைய உறுத்தன்மை, மின் ஓயர்களின் நிலை, தீயணைப்பு சான்று, முழு சுகாதாரம், கழிவுகளை அப்புறப்படுத்தும் நிலை, அவசர காலத்தில் வெளியேறும் வழி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அறிக்கையாக தயார் செய்து மாநகராட்சி நிர்வாகத்திடம் சமர்பிக்க நகரமைப்பு அலுவலர்கள்நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.