சிறுமலையில் வீடுகள் போல் மின் இணைப்பு பெற்ற 3 காட்டேஜ்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதிப்பு
திண்டுக்கல்; தினமலர் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் சிறுமலையில் வீடுகள் போல் காட்டேஜ்களுக்கு மின் இணைப்புகள் பெற்று மோசடி செய்த 3 காட்டேஜ்களுக்கு மின்வாரிய அமலாக்கத்துறை அதிகாரிகள் ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்தனர்.திண்டுக்கல் சிறுமலை கொடைக்கானல் போல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த சீதோஷ்ண நிலையுடன் இருக்கும். இதை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதை கருத்தில் கொண்ட மலை பகுதிகளில் புதிதாக காட்டேஜ்களை கட்டி உள்ளனர். புதிதாக கட்டப்படும் காட்டேஜ்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதை போல் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதியை பெறுகின்றனர். ரூ.லட்சக்கணக்கில் வரி இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் பிப்.22ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திண்டுக்கல் மின்வாரிய அமலாக்கத்துறை அதிகாரிகள், மின்வாரிய முன்னாள் ராணுவ வீரர்கள் குழுவினர் சிறுமலையில் உள்ள காட்டேஜ்களில் ஆய்வு செய்தனர். 33 காட்டேஜ்களில் ஆய்வுகள் நடந்த நிலையில் 3 காட்டேஜ்களில் வீடுகளுக்கு பெறுவது போல் மின் இணைப்புகள் பெறப்பட்டது கண்டறியப்பட்டது. சம்பந்தபட்ட 3 காட்டேஜ் உரிமையாளர்களுக்கும் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு முறையாக மின் இணைப்புகள் மாற்றப்பட்டது.