சின்னாளபட்டியில் காமன் பண்டிகை துவக்கம்
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் 139 ஆண்டு பாரம்பரிய காமன் பண்டிகை நேற்று இரவு துவங்கியது.சின்னாளபட்டி கடைவீதியில் உள்ள காமய (காமன்) சுவாமி கோயில் திருவிழா நேற்று இரவு மூன்றாம் பிறை தரிசனத்துடன் பிருந்தாவன தோப்பு ராமஅழகர் கோயிலில் துவங்கியது. இதையொட்டி பேக்கரும்பு, மா, ஆமணக்கு, அரசு, அரளி இலை, பூக்களால் சுவாமி அலங்கரித்தல் நடந்தது. பிறை தரிசனத்தை தொடர்ந்து பரம்பரை நிர்வாக அறங்காவலர் ஜமீன்தார் முத்துக்குமார் தலைமையில் ராம அழகர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட காமன் சுவாமியை பூசாரி பால்பாண்டி தோளில் சுமந்தபடி கோயிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். கோயில் பீடத்தில் சுவாமி ஊன்றுதலுடன் விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா குழு தலைவர் சிவமுருகேசன், செயலாளர் ராஜா, பொருளாளர் பொன்ராஜ் செய்திருந்தனர். மார்ச் 13ல் காமன் தகனமும், மார்ச் 15ல் சுவாமி எழுப்புதலும் நடக்க உள்ளது.