ஓய்வு பெறும் விழாவை புறக்கணித்து தர்ணா
திண்டுக்கல் : போக்குவரத்து துறையைகண்டித்து ஓய்வு நாள் விழாவை புறக்கணித்து திண்டுக்கல் மண்டல அலுவலகம் முன்பு நடத்துனர் ஜெயக்குமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றி நேற்று ஓய்வு பெற்றவர் சி.ஐ.டி.யு., திண்டுக்கல் போக்குவரத்து துறை மண்டல தலைவர் ஜெயக்குமார். இவர் நிர்வாகம் நடத்தும் ஓய்வு பெறும் நாள் விழாவை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.போக்குவரத்து அலுவலக கிளை 3 முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபின் அவர் கூறியதாவது : போக்குவரத்து கழகத்தில் 29 ஆண்டுகள் பணி செய்து தற்போது பணி ஓய்வு பெறுகிறேன்.நிர்வாகம் வழங்க வேண்டிய பணி ஓய்வு பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு டி.ஏ., வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்று 22 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த பலனும் வழங்கப்படவில்லை. 2004 க்கு பின்பு பணியில் சேர்ந்த எந்த தொழிலாளிகளுக்கும் பென்ஷன் இல்லை.பணியின்போது இறந்த தொழிலாளிகளுக்கு எந்த ஒரு பலனும் இதுவரை வழங்கவில்லை. இதனை கண்டித்து நிர்வாகம் நடத்தக்கூடிய ஓய்வு பெறும் விழாவை புறக்கணித்து உள்ளேன் என்றார்.