| ADDED : ஆக 15, 2024 01:41 AM
திண்டுக்கல்:ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்துக்கு கொலை மிரட்டல் விடுத்து பா.ஜ., அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பிய இருவரை பழநி போலீசார் கைது செய்தனர்.பா.ஜ., திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பழநியை சேர்ந்த கனகராஜ். இவரது பெயருக்கு பழநி இடும்பன் கோயில் ரோட்டில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு இரு தினங்களுக்கு முன் எழுதியவர் பெயரில்லாத கடிதம் வந்தது. அதில் ஹிந்து தலைவர்களை கொலை செய்ய கைசர் அலி, அவரது நண்பர் பாரூக் உள்ளிட்டோர் 10 பேர் கொண்ட குழுவுடன் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டு உள்ளனர். குறிப்பாக ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக கனகராஜ் பழநி போலீசில் புகார் அளித்தார். சி.சி.டி.வி., காட்சிகள் உள்ளிட்டவை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். பழநி கோட்டை மேட்டுத் தெருவை சேர்ந்த அப்துல் வாஹித் 64,க்கும் கைசர் அலிக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது. கைசர் அலியை பழி வாங்க அப்துல் வாஹித், முகமது ஆசிக்பாபு 40, சேர்ந்து கடிதம் அனுப்பியது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.