ரயிலில் 17 கிலோ குட்கா பறிமுதல்
திண்டுக்கல்: புருலியா ரயிலில் கடத்தி வரப்பட்ட 17 கிலோ குட்காவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து திருநெல்வேலிக்கு வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. டிச.15 காலை 10:00 மணிக்கு புருலியாவில் புறப்பட்ட ரயில் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு திண்டுக்கல் வந்தது. திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி தலைமையில் போலீசார் ரயிலின் முன்பதிவில்லா பெட்டிகளில் சோதனை நடத்தினர். ஒரு பெட்டியில் சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 17 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார் சி.சி.டி.வி., காட்சிகள் பதிவுப்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.