புத்தாண்டில் பூத்த 23 மலர்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் 23 குழந்தைகள் பிறந்துள்ளது. இவர்களின் பெற்றோர் டாக்டர்கள்,நர்சுகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். 2025 புத்தாண்டு நேற்று முன் தினம் இரவு 12:00 மணி முதல் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி அன்பை பரிமாறி கொண்டாடினர். திண்டுக்கல் மாவட்டத்திலும் கோயில்கள், சர்ச்சுகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை முதல் இரவு வரை ஆண் 12 ,பெண் 11 என 23 குழந்தைகள் பிறந்தது. புத்தாண்டில் பிறந்ததால் இவர்களின் பெற்றோர் மகிழ்ச்சியில் டாக்டர்கள், நர்சுகள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.