உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திசை மாறி செல்லும் குறைதீர் கூட்டம்

திசை மாறி செல்லும் குறைதீர் கூட்டம்

ஏமாற்றத்துடன் செல்லும் விவசாயிகள் கொடைக்கானல்: கொடைக்கானலில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் திசை மாறி செல்வதால் விவசாயிகள் குறைகளை கூற முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவலம் தொடர்கிறது. விவசாயிகள் குறைதீர் கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்த நிலையில் மலைப்பகுதி விவசாயிகளின் குறைகள் எளிதில் கூற முடியாத நிலை இருந்தது. இதை தவிர்க்க கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. துவக்கத்தில் விவசாயிகளுக்கு பலனளித்த இக்கூட்டம் தற்போது திசைமாறி சமூக ஆர்வலர்கள், கட்சி அமைப்பினர் உள்ளிட்ட விவசாயிகள் சாராத சிண்டிகேட் அமைப்பினர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சார்ந்த சுயநல பிரச்னைகளை முன்வைத்து கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் போக்கு தொடர்கிறது. குறிப்பிட்ட நபர்கள் ஆதிக்கத்தால் விவசாயிகள் தங்களது பிரச்னையை கூற முடியாது இடையூறு ஏற்படுகிறது. தோட்டக்கலை உள்ளிட்ட துறை அதிகாரிகள் விவசாயம் சார்ந்த கருத்து, திட்டங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க முடியாமல் வெறுமனே வந்து செல்கின்றனர். இதற்கு கூட்டம் நடத்தும் அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். நேற்று நடந்த கூட்டத்தில் குறிப்பிட்ட சில நபர்கள் 2 மணி நேர கூட்டத்தை தங்களுடைய நேரமாக்கி விவசாயிகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மாவட்ட அளவிலான அதிகாரிகளை நியமித்து கூட்டம் முறையாக நடக்கவும், வரும் அனைத்து விவசாயிகளுக்கு பேச முக்கியத்துவம் அளிக்கும் கூட்டமாக நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !