திறந்து கிடந்த காவிரி குடிநீர் தொட்டி டூவீலரில் சென்றவர் தவறி விழுந்து பலி
வேடசந்துார்: ரோட்டோர வளைவில் கட்டப்பட்ட காவிரி குடிநீர் ஏர் வாழ்வு தரைமட்ட தொட்டி திறந்து கிடந்த நிலையில் டூவீலரில் சென்றவர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியானார். இழப்பீடு கேட்டு உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெட்டியார்சத்திரம் நடுப்பட்டியை சேர்ந்தவர் சமையல் மாஸ்டர் குஞ்சையா 45. திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். திண்டுக்கல் ஓட்டல் பணி முடிந்து நேற்று முன் தினம் இரவில் டூவீலரில் ஊருக்கு வந்தார். ஜி.நடுப்பட்டி அருகே வந்தபோது காவிரி குடிநீர் ஏர்வாழ்வு தொட்டியில் தவறி விழுந்து இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் அரசு மருத்துவமனை முன்பு இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி உடலை வாங்க மறுத்து ஜி.நடுப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.