உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களை ஈர்க்கும் அப்துல் கலாம் அறக்கட்டளை

மாணவர்களை ஈர்க்கும் அப்துல் கலாம் அறக்கட்டளை

மரக்கன்றுகள்,மூலிகை செடிகள் நடுவதன் மூலம் பசுமையை அதிகரித்து அதில் மாணவர்களையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை.நத்தம் சுற்றுவட்டாரத்தில் ஹச்.ஐ. எல்.எஜுகேஷன் டிரஸ்ட் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை இணைந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள், பனை விதைகள், இல்லங்கள் தோறும் மூலிகைச் செடிகள் நடவு செய்து வருகின்றன. அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பிளாஸ்டிக் பை தீமைகளைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். மாணவர்கள் அறிவை வளர்க்கும் விதமாக அறிவியல் கண்காட்சி வைத்து அதில் திறமையாக அறிவியல் படைப்புகள் செய்த மாணவர்கள்,இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்து வருகிறார்கள். இயற்கையை காக்க, மரம் நடுதல், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான பணிகள், உதவிகள், இளைஞர்கள், பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சுயதொழில் பயிற்சிகள், வழிகாட்டும் நிகழ்ச்சிகள் என தங்களின் சேவை சிறகை விரியச் செய்துள்ளது. நத்தம் கோபால்பட்டி,ரெட்டியார்சத்திரம், மதுரை, அய்யலுார், சின்னாளபட்டி, காந்திகிராமம், குஜிலியம்பாறை, சாணார்பட்டி, கொண்டன் செட்டிபட்டி, ராமன் செட்டிபட்டி, வேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்வுகளை இவ்வமைப்பு நடத்தியுள்ளனர். 7 ஆண்டுகளாக சமூகப்பணியில் ஈடுபட்டு வருவதன் மூலம் இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் மூலம் சமுதாயத்தை நல்ல மாற்றத்தை உருவாக்குகிறது. இன்றைய தலைமுறையிடம் விதைக்கப்படும் விழிப்புணர்வு மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தள மான மேம்பாட்டை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் சமூக பணி ஆற்றி வருகின்றனர்.

மனநிறைவாக உள்ளது

மருதைகலாம்,நிர்வாகி, அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை, சாணார்பட்டி: சமூகப் பணிக்கென தனி நேரம் ஒதுக்கி விழிப்புணர்வு, சமுதாய மேம்பாட்டிற்கான வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் மன நிறைவு ஏற்படுகிறது. அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் செயற்கை, வேதி கலவை இல்லாத இடமே இல்லை என்ற சூழலை உருவாக்கி உள்ளோம். சமீபத்திய பருவகால மாற்றம், உயிரினங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வித்தியாசமான தொற்று வித்தியாசமான தொற்று நோய்கள், விதவிதமான பாதிப்புகள் போன்றவற்றிற்கு செயற்கை, வேதி பொருட்கள் சார்ந்த உணவூட்ட முறைகளே காரணம். இயற்கை வழி வேளாண்மையை ஊக்குவிப்பதன் மூலம் நிலம், நீர், காற்று மாசுபடுதலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இயன்ற அளவு பசுமையான மரக் கன்று நடவு, பராமரிப்பு போன்ற வற்றை மேற்கொண்டு வருவதன் மூலம் மழை நீர், தரமான உணவு உற்பத்தி போன்றவற்றிற்கு அடித்தளம் அமைக்க முடியும். பனை விதை நடவு, மரக்கன்று வளர்ப்பு, பராமரிப்பு, இவற்றின் முக்கியத் துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்துதல், போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல் போன்றவற்றை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொண்டு வருகிறோம்.

விழிப்புணர்வு செய்கிறோம்

மகேந்திரபிரபு, நிறுவனர் எச்.ஐ.எல்., எஜுகேஷன் டிரஸ்ட், திண்டுக்கல்: பசுமை சூழலை விரிவுபடுத்து தல், துாய்மை பசுமை கிராமம் உருவாக்கும் களப் பணியை ஊக்குவிப்பது. மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நிகழ்வுகள், மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்பு, கலாமின் கனவை நிறைவேற்ற வீடு தோறும் கலாம் கனவு நுாலகம் ஏற்படுத்தும் முயற்சி, பாலிதீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு, விவசாய தின விழா நடத்தி விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை செய்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ