உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜனவரியில் மேலும் பல கட்சிகள் கூட்டணியில் சேரும் பா.ஜ ., மாநில தலைவர் நாகேந்திரன் தகவல்

ஜனவரியில் மேலும் பல கட்சிகள் கூட்டணியில் சேரும் பா.ஜ ., மாநில தலைவர் நாகேந்திரன் தகவல்

வத்தலக்குண்டு: ''ஜனவரியில் மேலும் பல கட்சிகள் கூட்டணியில் சேரும்'' என பா.ஜ ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தமிழகம் தலை நிமிர தமிழனின் நடைபயணத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகள் சென்றால் இந்தியாவா என ஏளனமாக பார்த்தனர். தற்போது வெளிநாடு சென்றால் நமது பாஸ்போர்ட்டை பார்த்ததும் ஓ மோடியா என பெருமையாக பார்க்கின்றனர். தி.மு.க.,அரசு நான்கரை ஆண்டுகளில் செய்யாததை ஒரு மாத காலத்தில் செய்து முடிப்பார்களாம். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என விலைவாசியை ஏற்றி கொண்டே தான் செல்கின்றனர். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது என கேட்கிறார் தமிழக முதல்வர். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 16 லட்சம் கோடி வழங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கி உள்ளது. பொள்ளாச்சி, பழநி ரயில் பாதை விரிவாக்கம், பழநி, ஒட்டன்சத்திரம். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன்களில் ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள், திண்டுக்கல் குமுளி சாலைக்கு 415 கோடி, 40 மலிவு விலை மருந்து கடைகள் என ஏராளமான திட்டங்களை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வழங்கி உள்ளார். தமிழக அரசு நீட் தேர்வை ஒழிப்போம் என்றது. ஒழிக்க முடியவில்லை. மதுக்கடையை குறைப்போம் என்றனர். ஆனால் ரூ. 750 கோடிக்கு தீபாவளிக்கு விற்றதாக பெருமை பேசுகின்றனர். தி.மு.க., கூட்டணியில் அதன் கூட்டணி கட்சி தலைவர்களே ரவுடியிசத்தை வளர்ப்பவர்களாக உள்ளனர். திருமாவளவனுக்கு அ.தி.மு.க., கூட்டணி வலுத்து வருவதைப் பார்த்து பயமாக உள்ளது. இதேபோன்று தமிழக முதல்வருக்கும் அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி பார்த்து பதட்டம் ஏற்பட்டு பொய்யாக பேசி வருகிறார். தற்போது உள்ள அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் ஜனவரிக்கு பிறகு மேலும் சில கட்சிகள் சேர கூட்டணி வலுவாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ