பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் இடைப்பாடி பக்தர்கள்
பழநி: பழநி தைப்பூச திருவிழா நடந்ததை முன்னிட்டு இடைப்பாடி ஊரைச் சேர்ந்த பக்தர்கள் 15 டன் அளவுள்ள பஞ்சாமிர்தம் தயார் செய்து வருகின்றனர். பழநி தைப்பூச திருவிழா பிப்.4 அன்று நிறைவடைந்தது. இடைப்பாடியை சேர்ந்த பர்வத ராஜகுல பக்தர்கள், காங்கேயம், தாராபுரம் வழியாக மானுரை வந்தடைவர். அதன் பின் பழநி வரும் அவர்கள், முருகன் கோயில் சுவாமி தரிசனம் செய்து வழிபடுவர். நேற்று சர்க்கரை, பேரிச்சம்பழம், தேன், கற்கண்டு, நெய், ஏலக்காய், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் பெரிய அண்டாக்களில் 15 டன் அளவுள்ள பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழநி முருகனுக்கு மூலவருக்கு பஞ்சாமிர்தம் படைத்து வழிபாடு செய்ய உள்ளனர். நாளை (பிப்.10ல்) இரவில் முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் தங்க உள்ளனர். பல ஆண்டுகளாக இடைப்பாடி பக்தர்கள் இரவில் தங்கி வழிபடுவது வழக்கமாக நடக்கும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.