சீசன் முடியும் நிலையில் மாங்காய் விலை உயர்வு விரக்தியில் விவசாயிகள்
ஒட்டன்சத்திரம்:சீசன் முடியும் நேரத்தில் மாங்காய் விலை ஏற்றம் அடைந்துள்ளதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, பழநி, ஆயக்குடி , திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம், உடுமலை, கொமரலிங்கம் பகுதிகளில் கல்லாமை, நீலம், செந்துாரம் உள்ளிட்ட மாங்காய் வகைகளை விவசாயிகள் அதிகமாக சாகுபடி செய்கின்றனர். இந்தாண்டு மாங்காய் விளைச்சல் அபரிமிதமாக அதிகரித்தது. இதன் காரணமாக உரிய விலை கிடைக்காமல் போனதால் விவசாயிகள் மாங்காய்களை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தும் நிலைக்கு சென்றனர். மூன்று மாதங்களாக கிலோ மாங்காய் ரூ.8 முதல் ரூ.10 வரை மட்டுமே விற்பனை யானது. இதனால் மாங்காய்களை மரத்திலிருந்து பறிக்காமல் விட்டனர். சிலர் விரக்தியில் மா மரங்களை வெட்டி அழித்து விட்டனர். தற்போது காலம் என்ற மாங்காய் சீசன் முடியும் தருவாயில் உள்ளதால் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் மொத்த கொள்முதல் விலை கிலோ ரூ.8க்கு விற்ற மாங்காய் (கல்லாமை) ரூ.23க்கு விற்பனை ஆனது. சீசன் முடியும் தருவாயில் விலை ஏற்றமடைந்துள்ளது விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டன்சத்திரம் கமிஷன் கடை உரிமையாளர் சாதிக் கூறியதாவது: பத்து ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. கேரளாவில் இருந்தும் வரத்து இருந்ததால் மூன்று மாதங்களாக விலை சரிவடைந்தது. தற்போது மாங்காய் வரத்து குறைய விலை அதிகரித்துள்ளது. இரு மாதங்களுக்குப்பின் உள்ளூர் மாங்காய் வரத்து மறுபடியும் தொடங்கும் என்றார்